4/3/20

கா... கா...

life kavithai in tamil

வீட்டின் மேலே சத்தம் கேட்டது 

விருந்தாளி வருவார்களென 

விளக்கம் சொல்லப்பட்டது ...

கா ...கா... 

தன்னலம் பார்க்காது  

தன்னினம் அழைத்து  

கரைந்துண்ணும் காகம் என 

கதையும்  சொல்லப்பட்டது ...

கா ...கா..

காரியத்தின் போதுமட்டும் 

கைகுலுக்க வருபவர்களை 

காக்கா பிடிப்பவர்கள் என 

காரணப்பெயர் சொல்லப்பட்டது ...

கா ... கா ... 

அண்டங்காக்கையோடு  

அவமான ஒப்பீடாய் 

காலம் காலமாய் 

காகத்தின் நிறம் சொல்லப்பட்டது ...

ஏனோ

அத்தனையும் விடுத்து  ...

மனசுக்குள் தங்கியது  ...

குடுவைக்குள் இருந்த 

குறைவான நீரில் 

ஒவ்வொரு கற்களாய் போட்டு  

மேலெழுந்த நீரில் 

தாகம் தணிந்த 

காகம் பற்றிய கதையே !

- ராம் ஆனந்த்

Kavithai Competition

 

0 Please share your thoughts and suggestions!: