30/3/20

பு(பி)ரிதலின் பெருந்தன்மை

kavithai pirivu

அவனின் மனைவியான 

எனது காதலி

இன்னும் அப்படியே 

புன்னகைக்கிறாள்  !

என்னை ஏமாற்றக் கூடாது

என்பதற்காக 

என்னை விட்டு பிரிந்தவள் அவள் ! 

சுற்றயல் அழுத்தங்களால்  

நடித்துக் காட்டவென்று புறப்பட்டு

தூண்டப்பட்ட 

உணர்வு மயக்கத்தில்

எனக்காக வைத்திருந்த 

அந்தரங்க முதல்களை 

பறிகொடுத்த அப்பாவி !

காதலை அசிங்கப்படுத்தக் கூடாதென்பதற்காக 

எனது நினைவுகளுடன் 

அவனுடன் வாழ்கிறாள் 

வண்டுக்கு தேனைக் கொடுத்து

நறுமணத்தை இரசிகனுக்கு கொடுக்கும் புஷ்பம் போல !

என்னுடன் அவள் 

இலகுவாக இணைந்திருக்கலாம் 

இரகசியங்களை மறைத்துக் கொண்டு

ஆனால் 

போராடியே பிரிந்தாள் 

உண்மைகளைச் 

சொல்லிச் சொல்லி !

அவள் என்னைப் பிரிந்ததால் 

நாங்கள் இன்னும் 

பிரியாத பிரியமான காதலர்களே !

அவள் 

இன்னும் அப்படியே

புன்னகைக்கிறாள்

அப்போது

எல்லாப் பூவனங்களும் 

தலை குனிந்து நிற்கின்றன

நாங்களும் காதலித்துப்

பிரிந்திருக்கலாமென்று ! 

- எஸ். ஜலால்டீன்

Kavithai Competition

 

0 Please share your thoughts and suggestions!: